Archives: ஜூன் 2019

புதிய பார்வை தேவை

“வெறுமனே பச்சைபசேலென்று மங்கலாக ஒரு உருவத்தைப் பார்ப்பதைவிட மரத்தையும் அதன் ஒவ்வொரு இலைகளையும் பார்ப்பது அற்புதமாக இருக்கும்” என்று என் அப்பா சொன்னார். அது எவ்வளவு உண்மையென்பது எனக்குத் தெரியும். அப்போது எனக்கு பதினெட்டு வயது; புதிதாக கண்ணாடி அணிந்திருந்தேன், அது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒவ்வொன்றையும் ஒரு புதிய விதத்தில் பார்க்கமுடிந்தது; மங்கலாகக் தெரிந்தவை எல்லாம் தெளிவாக அழகாகத் தெரிந்தன!

கண்ணாடி அணியாமல் மரங்களைப் பார்ப்பதுபோலத்தான் சிலசமயங்களில் வேதாகமத்தின் சில புத்தகங்களை வாசிக்கும்போதும் உணர்கிறேன். அவற்றில் அறிந்துகொள்வதற்கு அதிகம் இல்லாததுபோலத் தோன்றுகிறது. ஆனால் சலிப்பூட்டுவதுபோலத் தெரிகிற வசனங்களில் உள்ள விபரங்களைக் கவனிக்கும்போது, ஆச்சரியமான விஷயங்கள் வெளிப்படுகின்றன.

யாத்திராகமப் புத்தகத்தை வாசிக்கும்போது இத்தகைய அனுபவத்தைப் பெற்றேன். இஸ்ரவேலர் மத்தியில் தாம் வாசஞ்செய்வதற்கு தற்காலிகமாக ஆசரிப்புக்கூடாரம் ஒன்றை தேவன் கட்டச்சொல்கிறார். அதன் கட்டுமான விவரங்களைச் சொல்லுகிறார். அதை வாசிக்கும்போது சற்று சலிப்புத் தட்டுகிறது. 25ம் அதிகாரத்தில் குத்துவிளக்கு குறித்த விவரங்களை தேவன் கொடுக்கிறார். அதை சற்று ஆராய்ந்து பார்த்தேன். அதன் தண்டு, கிளைகள், மொக்குகள், பழங்கள், பூக்கள் அனைத்தையும் ‘பசும்பொன்னினால்’ அடிப்புவேலையாய்ச் செய்யச் சொல்லுகிறார். வச 31. அதன் கிண்ணங்கள் “வாதுமை பூக்களை” போல இருக்கவேண்டுமாம். வச 34.

வாதுமை மரங்கள் அற்புதமானவை. அதே இயற்கை அழகு தம்முடைய ஆசரிப்புக்கூடாரத்திலும் காணப்பட தேவன் சொன்னார்!

“காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப் பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்” என்று பவுல் எழுதினார். ரோமர் 1:20. தேவனுடைய அழகைக் காண சிலசமயங்களில் சிருஷ்டிப்பையும், சலிப்புத்தட்டுகிற சில வசனங்களையும் புதிய பார்வையோடு பார்க்கவேண்டும்.

சுறாக்களும்கூட கடிக்காமல் இருக்கலாம்

விடுமுறை சயமத்தில் என் பிள்ளைகளை ஒரு நீர்வாழ் காட்சிசாலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவர்கள் சந்தோஷமாக விளையாடினார்கள், எனக்கு சற்று
கவலையிலிருந்தது. அங்கு விசேஷமாகச் செய்யப்பட்டிருக்கும் தொட்டிகளில் உள்ள சிறிய சுறாக்களிடம் மக்கள் விளையாடலாம். அங்கிருந்த உதவியாளரிடம், அந்தச் சுறாக்கள் எப்போதாவது யாருடைய விரலையாவது கடித்திருக்கின்றனவா என்று கேட்டேன். சுறாக்களுக்கு சற்றுமுன்னரே இரையளித்திருப்பதாகவும், அதுவும் கூடுதலாக இரை கொடுத்திருப்பதாகவும் கூறினார். அவற்றிற்கு பசி இருக்காது என்பதால் கடிக்காது என்றார்.

சுறாக்களுடன் பழகுவது குறித்து நான் கற்றுக்கொண்டதை ஒரு நீதிமொழியும் நினைவூட்டுகிறது: “திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.” நீதி 27:7. பசியானது, அதாவது உள்ளுக்குள் வெறுமையாக இருப்பதுபோன்ற உணர்வானது, நாம் தீர்மானங்களைச் செய்யும்போது நம்முடைய பகுத்தறிவை மழுங்கச்செய்யலாம். அந்த வெறுமையைப் போக்க எதையும் செய்வதற்கு அது நம்மைச் சம்மதிக்கவைக்கிறது, ஏன் அடுத்தவருக்கு அது பாதிப்பையே உண்டாக்கினாலும் செய்யவைக்கிறது.

பசிகள் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த தேவன் விரும்புவதில்லை. கிறிஸ்துவின் அன்பு நம்மில் நிறைந்திருக்க அவர் விரும்புகிறார், அப்போதுதான் நாம் செய்கிற ஒவ்வொன்றிற்கும் அவர் தருகிற சமாதானமும் உறுதியும் அடித்தளமாக இருக்கும். தேவன் நம்மேல் நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறார் என்பதை எப்போதும் உணர்ந்திருக்கும்போது, நம்மில் நம்பிக்கை உண்டாகும். சாதனைகள், உடைமைகள், உறவுகள் போன்ற வாழ்க்கையின் “இனிமையான” விஷயங்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்க அது நம்மைப் பெலப்படுத்தும்.

இயேசுவோடான உறவு மட்டுமே நமக்கு மெய்யான நிம்மதியைக் கொடுக்கிறது. தேவன் நம்மேல் காட்டுகிற ஈடுஇணையற்ற அன்பை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் “தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்பட” முடியும். எபேசியர் 3:19.

வழிகளை மாற்றும் தேவன்

மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய தேவன் நமக்கு ஒரு வாசலைத் திறந்திக்கிறார் என்று உணர்ந்தாலும், அந்தச் சமயத்தில் 'வேண்டாம்," அல்லது 'இப்போது வேண்டாம்" என்று சொன்னால் எப்படி இருக்கும்? என்னுடைய ஊழியக்காலத்தின் ஆரம்பத்தில் இரண்டு வாய்ப்புகள் எனக்கு வந்தன் இரண்டுமே என்னுடைய திறமைகள், வரங்கள் மூலம் சபையின் தேவைகளைச் சந்திப்பதற்கேற்ற வாய்ப்புகள்தாம். ஆனால், கடைசியில் இரண்டு வாசல்களுமே அடைபட்டன. இந்த ஏமாற்றமான

அனுபவங்களுக்கு பிறகு, இன்னொரு பொறுப்பு தேடி வந்தது; அதற்கு நான் தேர்வுசெய்யப்பட்டேன். அந்த ஊழிய அழைப்புமூலம் வாழ்க்கையை மாற்றத்தக்க ஊழியங்களை பதின்மூன்று வருடங்கள் செய்ய முடிந்தது.

அப்போஸ்தலர் 16ல், பவுலையும் அவரோடு இருந்தவர்களையும் இரண்டுமுறை தேவன் தடைசெய்து, வேறுபக்கம் அனுப்புகிறார். முதலாவது அவர்கள், 'ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டார்கள்" (வச. 6). பிறகு அவர்கள், 'மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்" (வச. 7). தம்முடைய ஊழியத்திற்கும், ஊழியக்

காரர்களுக்கும் எது சரியாக இருக்கும் என்பது தேவனுக்குத் தெரியும், அது அவர்களுக்குத் தெரியாது. முந்தின திட்டங்களை தேவன் தடைசெய்ததால்தான், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்கமுடிந்தது, தேவனுடைய உறுதியான வழிநடத்துதலைப் பெறமுடிந்தது (வச. 9-10).

இது உண்மையிலேயே பெரிய இழப்புதான் என்கிற எண்ணம் முதலில் வந்ததுமே யாருக்குத்தான் வருத்தமாக இருக்காது? எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் போகும்போதும், செய்த வேலைக்கு போதுமான வருமானம் கிடைக்காதபோதும், வேறிடத்திற்கு மாறவேண்டும் என்கிற எண்ணம் தடைபடும்போதும் பெரிய வேதனையாக இருக்கும். இத்தகைய விஷயங்கள் அந்த நேரத்தில் நமக்கு அதிக மனப்பாரத்தைக் கொடுக்கலாம்;. ஆனால், அவை உண்மையிலேயே தேவன் மாற்றிவிட்ட பாதைகள் என்பதும், தாம் விரும்புகிற இடத்தில் நம்மை வைப்பதற்கு தேவன் கிருபையாகக் கையாண்ட வழிகள் என்பதும் பிறகுதான் தெரியவரும்; அப்போது நாம் தேவனுக்கு நன்றி கூறுவோம்.

கயிற்றை அவிழ்த்துவிடுங்கள்

மன்னிப்பதால் கிடைக்கிற சுகத்தை எல்லாரும் அறிந்துகொள்ள ஒரு கிறிஸ்தவ அமைப்பினர் முயன்று வருகிறார்கள். அந்த ஊழியத்தின் ஒரு பகுதியாக குறுநாடகம் ஒன்றை நடத்துவார்கள். அதில், தவறுசெய்த ஒருவரையும் அவரால் பாதிக்கப்பட்டவரையும் முதுகோடு முதுகாகச் சேர்த்துக் கட்டிவிடுவார்கள். அந்தக் கட்டிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்தான் கட்டை அவிழ்க்கவேண்டும். அவர் எவ்வளவுதான் முயன்றாலும் கட்டை அவிழ்க்க முடியாது; கட்டை அவிழ்க்காமல் தப்பிக்கவும் முடியாது.

தாங்கள் தவறுசெய்துவிட்டதாக ஒருவர் நம்மிடம் வந்து வருத்தம் தெரிவிக்கும்போது, அவரை மன்னிக்கவேண்டும். அப்போதுதான் நாம் அனுபவித்த வேதனை, கசப்பிலிருந்து நம்மையும் நம்மைப் பாடுபடுத்தியவரையும் விடுவித்துவிட முடியும். ஏசாவின் சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபு ஏமாற்றி வாங்கிவிட்டார், அதன்பிறகு இரு சகோதரர்களும் இருபது வருடங்கள் பிரிந்து வாழ்கிறார்கள். இந்தச் சம்பவத்தை ஆதியாகமத்தில் வாசிக்கலாம். பல வருடங்கள் கடந்த நிலையில், பிதாக்களுடைய தேசத்திற்குத் திரும்பிச்செல்லும்படி யாக்கோபிடம் தேவன் கூறுகிறார். ஆதி 31:3. யாக்கோபு உடனே கீழ்ப்படிந்தார்; ஆனால், அதற்கு முன்னரே ஏராளமான மிருக ஜீவன்களை வெகுமானமாக ஏசாவுக்கு அனுப்பிவைக்கிறார். ஆதி 32:13-15. சகோதரர்கள் இருவரும் சந்தித்த போது, ஏழுவிசை தன் சகோதரனை குனிந்து, வணங்குகிறார். ஆதி 33:3. ஏசா ஓடிச்சென்று, தன் சகோதரனைக் கட்டியணைக்கிறார்; மீண்டும் சேர்ந்ததை எண்ணி, இருவரும் அழுகிறார்கள் (வச. 4). தன் சகோதரனுக்கு விரோதமாக தான் செய்த பாவத்தின் பிடியிலிருந்து இப்போது யாக்கோபு விடுவிக்கப்பட்டார்.

மன்னிப்பு வழங்கமுடியாமல் சிறைபட்டிருக்கிறீர்களா? கோபத்தையும் பயத்தையும் அல்லது அவமானத்தையும் அகற்றமுடியாமல் தவிக்கிறீர்களா? நீங்கள் உதவிகேட்டால், தேவன் தம்முடைய குமாரன் மூலமாகவும் ஆவியானவர் மூலமாகவும் உங்களை விடுவிப்பார். எப்படிப்பட்ட கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும் கட்டை அவிழ்ப்பதற்கான செயல்முறையைத் துவங்குவதற்கு அவர் பெலன் தருவார்; அப்போது நீங்கள் விடுதலைபெறலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனை அறியச்செய்தல்

தேவன் மீதும் மக்கள் மீதும் கேத்ரின் கொண்டிருந்த அன்பானது வேதாகம மொழிபெயர்ப்பு பணியில் அவரை ஈடுபடச்செய்தது. இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் தாய்மொழியில் வேதாகமத்தைப் படித்து, அதை ஆழமாகப் புரிந்துகொண்டபோது அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் சொல்லும்போது, “அவர்கள் வேதத்தை படித்து புரிந்துகொள்ளும்போது அடிக்கடி கைதட்டவோ மற்ற விதங்களிலோ தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றி வாசித்து, ‘ஆஹா அற்புதம்!’ என்று சொல்கிறார்கள்” என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

அதிகமான மக்கள் தங்கள் சொந்த மொழியில் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று கேத்ரின் ஏங்குகிறார். இந்த விதத்தில், பத்மூ தீவில் இருந்த வயதான சீஷனான யோவானின் பார்வையை அவர் தத்தெடுக்கிறார். ஆவியின் மூலம், தேவன் அவரை பரலோகத்தின் சிம்மாசன அறைக்குள் கொண்டு சென்றார். அங்கு அவர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்க” (வெளிப்படுத்தல் 7:9) காண்கிறார். அவர்களெல்லாரும் “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வச. 10). 

தேவன் தன்னை ஆராதிக்கும் ஏராளமான ஜனங்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களுக்காக ஜெபிப்பவர்களை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயேசுவின் நற்செய்தியை அன்புடன் தங்கள் அண்டை வீட்டாரிடத்தில் கொண்டுசெல்பவர்களையும் பயன்படுத்துகிறார். “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வச. 12) என்று அவரை துதித்து இந்த பணியில் நாமும் கைகோர்க்கலாம். 

 

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.